தூண்டில் பாலத்தில் குவிந்து கிடக்கும் ஊசி மருந்துகள்
தூண்டில் பாலத்தில் குவிந்து கிடக்கும் ஊசி மருந்துகள்

தூத்துக்குடியில் அதிர்ச்சி... இளைஞர்களை ஆட்டிவைக்கும் போதை ஊசி கலாச்சாரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில்  உள்ள இளைஞர்கள் பலரும் சமீபகாலமாக போதை  ஊசி கலாச்சாரத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் உள்ள தூண்டில் வளைவு பகுதியில் அதிக அளவு போதை ஊசிகள் பயன்படுத்தப்பட்டு  தூக்கி எறியப்பட்டு கிடக்கிறது. இதை சமூக ஆர்வலர்கள் பலரும் பார்த்து பதைபதைத்து போயிருக்கிறார்கள். தூண்டில் பாலம் பகுதி முழுவதும் ஆங்காங்கே ஊசிகள், மருந்து பாட்டில்கள் என சிதறிக் கிடக்கின்றன. 

தூண்டில் பாலத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கற்பாலத்தில் குவார்ட்டர் பாட்டில் முதல் ஊசி வரை விரவிக் கிடக்கின்றன.  அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் நோயாளிகளுக்கு ஏற்படும் வலியின் தீவிரத்தை குறைக்கும் மருந்தை இங்குள்ளவர்கள் சிலர் மருந்துக் கடைகளில் இருந்து  வாங்கி வந்து போதைக்காக  பயன்படுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து செலுத்துவதால் முற்றிலுமாக மூளை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

திரேஸ்புரம் கடற்கரை
திரேஸ்புரம் கடற்கரை

இந்த மருந்தை  யார் உபயோகிக்கிறார்கள்?  மருத்துவர்கள் பரிந்துரையில் மட்டுமே வலிக்கு உபயோகிக்க பயன்படுத்தும் இந்த  மருந்தை இவர்களுக்கு கொடுப்பது யார்? என்பவற்றை உடனடியாக போலீஸார் கண்டறிந்து போதை ஊசி நடமாட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in