அதிர்ச்சி... வரதட்சணை கொடுமை; 2 மகள்களை கொன்றுவிட்டு பெண் தற்கொலை!

மகள்கள் புன்விதா, மன்விதாவுடன் மேகா
மகள்கள் புன்விதா, மன்விதாவுடன் மேகா

கர்நாடகாவில் வரதட்சணை கொடுமையால் 2 மகள்களை கொன்றுவிட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவர்கள் கொலை செய்யப்பட்டதாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா தெரக்கனாம்பி போலீஸ் எல்லைக்குட்பட்ட பொம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்ஜெயா. இவரது மனைவி மேகா (வயது 24). இந்த தம்பதியின் மகள்கள் புன்விதா (6), மன்விதா (3). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மேகாவின் தந்தை மகேஷ், தனஞ்ஜெயா குடும்பத்துக்கு நகை-பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளார்.

சில ஆண்டுகள் கணவன்-மனைவி சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், வரதட்சணை என்ற அரக்கனால் அவர்களின் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. மேகாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தனஞ்ஜெயா அவரை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் தனஞ்ஜெயாவின் தாய் நிர்மலம்மா, தந்தை மல்லிகார்ஜுனா ஆகியோரும் மேகாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் மேகா மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.

தற்கொலை
தற்கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனதை கல்லாக்கி கொண்டு 2 மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தெரக்கனாம்பி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் மேகா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வரதட்சணை கொடுமையால் மேகா தனது மகள்களை கொன்று தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கிடையே, மேகாவின் தந்தை தெரக்கனாம்பி போலீசில், வரதட்சணை கேட்டு மகள் மேகா, பேத்திகள் புன்விதா, மன்விதாவை தனஞ்ஜெயா மற்றும் அவரது குடும்பத்தினர் கொன்று தூக்கில் உடலை தொங்கவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார். இதுகுறித்து தெரக்கனாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகாவின் கணவர் தனஞ்ஜெயா, மாமியார் நிர்மலம்மா, மாமனார் மல்லிகார்ஜுனா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in