ஏசியை ஆன் செய்தபோது பாய்ந்த மின்சாரம்! தூக்கி வீசப்பட்டு காயத்துடன் உயிர் தப்பிய திமுக கவுன்சிலர்

ஏசியை ஆன் செய்தபோது பாய்ந்த மின்சாரம்! தூக்கி வீசப்பட்டு காயத்துடன் உயிர் தப்பிய திமுக கவுன்சிலர்

வீட்டில் உள்ள ஏசி இயந்திரத்தை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி திமுக கவுன்சிலர் காயமடைந்தார்.

சென்னை அயனாவரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் பரிதி இளம்ஸ்ருதி. இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன். மேலும் 99வது வார்டு திமுக கவுன்சிலராக பதவி வகித்து வரும் பரிதி இளம்ஸ்ருதி தனது வார்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து, தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை பரிதி இளம்ஸ்ருதி தனது வீட்டில் ஏசி இயந்திரத்தை ஆன் செய்து போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த கவுன்சிலரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிதிக்கு இடது கையில் தீக்காயம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து கவுன்சிலர் பரிதி இளம்ஸ்ருதி தனது வாட்ஸ் அப் குழுவில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "99வது வார்டு பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு வணக்கம். அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் எனது இல்லத்தில் ஏற்பட்ட மின்சார கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி நான் பாதிப்பு உள்ளாகி உள்ளேன். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருத்துவமனை செல்ல உள்ளேன்.

எனவே குழுவில் உள்ள உறுப்பினர் அனைவருக்கும் ஏதேனும் குறைகள் இருந்தால் இக்குழுவில் பதிவிடவும். மாநகராட்சி அதிகாரிகள் அதை சரி செய்து தருவார்கள். என்னுடைய அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அலுவலக உதவியாளர்கள் களத்தில் உள்ளார்கள். மருத்துவ ஆலோசனை பெற்று மீண்டும் களத்தில் வந்து பணியாற்றுவேன்" என குறிப்பிடப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in