
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம், (42). இவர் மேல்மலையனுார் தாலுகா துணை தாசில்தாராக (தேர்தல் பிரிவு) 3 மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்று பணி செய்து வந்தார். இதற்கு முன் செஞ்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்தார். இவர், நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டவர் அலுவலகம் செல்லவில்லை.
மேல்மலையனூர்-வளத்தி சாலையில் இறங்கி அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றுள்ளார். அங்கு சென்றதும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் குடும்ப பிரச்சினையால் பூங்காவனம் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் இரு வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. அவரது மனைவி லட்சுமி, அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து பூங்காவனத்தின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.