
தனக்கு துரோகம் செய்ததாக வெளிநாட்டு காதலியை கொல்லத் திட்டமிட்ட டெல்லிவாசி, திட்டமிட்டு அந்த காதலியை இந்தியாவுக்கு வரவழைத்து கொன்றார். சடலத்தை மறைக்க முயன்றதில் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் குர்பிரீத் சிங். இவர் தனது தொழில் நிமித்தம் அடிக்கடி சுவிட்சர்லாந்து சென்று வருவார். அப்படி ஒரு பயணத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த லீனா பெர்கர் என்ற பெண்ணை சந்தித்தார். இருவரும் காதலில் விழுந்தார்கள். குர்பிரீத் சுவிட்சர்லாந்து செல்லும்போதெல்லாம், லீனா பெர்கரை சந்தித்து கூடிக்குலாவி வருவார்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக லீனாவின் நடத்தையில் மாற்றம் இருந்ததாக குர்பிரீத் சந்தேகித்தார். அங்குள்ள இன்னொரு ஆணுடன் லீனா பெர்கர் பழகி வருவதாக குர்பிரீத்துக்கு தகவல் கிடைத்தது. தனக்கு லீனா துரோகம் செய்துவிட்டதாகவும், தனது நம்பிக்கை பாழாகிவிட்டதாகவும் குர்பிரீத் ஆவேசம் கொண்டார்.
சுவிட்சர்லாந்தில் வைத்தே லீனா பெர்கரை கொல்ல முயற்சித்தார். ஆனால் வெளிநாட்டு மண்ணில் வைத்து அந்நாட்டு பிரஜையை கொன்றால் எளிதில் சிக்கிக்கொள்வோம் என்று பயந்தார். எனவே வேறுவிதமாய் ஸ்கெட்ச் போட்டார். அதன்படி காதலியை இந்தியாவுக்கு வரவழைக்க முடிவு செய்தார்.
உடனே லீனாவை இந்தியாவுக்கு வரும்படியும், இந்தியாவின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து உல்லாசமாக இருக்கலாம் என்றும் குர்பிரீத் அழைப்பு விடுத்தார். அதனை நம்பி லீனா ஆவலோடு இந்தியா வந்தார். டெல்லிக்கு வெளியே சில தினங்கள் லீனாவோடு குர்பிரீத் சுற்றிக்காட்டினார். காதலியோடு உல்லாசமாக இருந்தபடியே, அவரை கொல்வது குறித்து தீவிரமாக யோசித்து வந்தார்.
ஆனால் அப்படி திடமான எந்த யோசனையும் குர்பிரீத்துக்கு பிடிபடவில்லை. லீனா சுவிட்சர்லாந்துக்கு திரும்பும் நாளும் வந்தது. இனியும் காத்திருக்கக்கூடாது என லீனாவை டெல்லியில் தனக்கு சொந்தமான இடத்திற்கு வரவழைத்து கொல்லத் துணிந்தார். வழக்கமான உல்லாசத்தின் பெயரால் காதலியின் கை, கால்களை கட்டிப்போட்டார்.
சல்லாபிக்கக் காத்திருந்த காதலியை இம்முறை குர்பிரீத் கொன்று தீர்த்தார். ஆனால் சடலத்தை எப்படி ஒழிப்பது என்பதில் குர்பிரீத்துக்கு சிக்கல் எழுந்தது. டெல்லி மாநகரத்தில் சிசிடிவிக்கள் நீக்கமற நிறைந்திருந்ததால், காரின் பின் சீட்டில் கிடத்திய காதலி சடலத்தோடு பல தினங்கள் வலம் வந்தார்.
காதலியை கொல்லும் திட்டத்தோடு, போலி ஆவணங்களின் பெயரால் அந்த காரை முன்கூட்டியே குர்பிரீத் வாங்கியிருந்தார். எனவே சடலம் மோசமாக நாறவே அரசுப் பள்ளி ஒன்றின் அருகே காரை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
காரையும் சடலத்தையும் கைப்பற்றிய டெல்லி போலீஸார் சிசிடிவி தடயங்கள் வாயிலாக ஆராய ஆரம்பித்தனர். பல தினங்கள் அந்த கார் மேற்கு டெல்லியின் தெருக்களில் வலம் வந்ததை கண்டறிந்தனர். விசாரித்ததில் காரின் உரிமையாளர் போலி ஆவணங்களில் அதனை வாங்கியிருப்பது தெரிய வந்தது.
இறந்தவர் வெளிநாட்டு பெண் என்பதால் தூதரகங்கள் வாயிலாக விசாரணையை திருப்பினர். அந்த வகையில் இறந்த பெண் சுவிட்சர்லாந்தை சேர்ந்த லீனா பெர்கர் என்பது தெரிய வந்தது. பின்னர் ஸ்விஸ் போலீஸார் உதவியால், லீனாவை அடிக்கடி சந்தித்த குர்பிரீத் சிங் விவரம் பிடிபட்டது.
இத்தனையும் 24 மணி நேரத்தில் கண்டறிந்த டெல்லி போலீஸார், குர்பிரீத் சிங்கை கொத்தாக அள்ளிச் சென்று தங்கள் பாணியில் விசாரித்தனர். குர்பிரீத் மேற்கண்ட விவரங்களை வாக்குமூலமாக தந்தார். ஆனபோதும் வெளிநாட்டுப் பெண்ணின் கொலையில் வேறு ஏதேனும் பின்னணி மற்றும் நபர்கள் இருக்கிறார்களா என்றும் டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.