விமானத்தின் கழிவறையில் பதுக்கிய 2.4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!

விமான கழிவறையில் பதுக்கப்பட்ட தங்கம் பறிமுதல்
விமான கழிவறையில் பதுக்கப்பட்ட தங்கம் பறிமுதல்

அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தின் கழிவறை தொட்டிக்குள் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2.4 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அபுதாபியில் இருந்து காலை 8:20 மணிக்கு சென்னை விமான நிலையத்தின் சர்வதேச விமான முணையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது.

இந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக காலை 10 மணி அளவில் ஐதராபாத்துக்கு புறப்பட்டு செல்ல வேண்டி இருந்தது. இதையடுத்து அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

அப்போது விமானத்தில் இருந்த கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் பார்சல் ஒன்று இருப்பதைக் கண்ட ஊழியர்கள் இதுகுறித்து விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையிட்டபோது, அது வெடிகுண்டு அல்ல என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பார்சலை வெளியே எடுத்து பிரித்து பார்த்தபோது, அதற்குள் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2.4 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், இந்த தங்கத்தை கழிவறை தொட்டிக்குள் போட்டுவிட்டு சென்ற பயணி யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in