முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை ஜாமீன்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை ஜாமீன்

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் கோரிய மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், `6 வருடங்களுக்கு முன்பான சம்பவத்தில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொய் புகாரில் பதிவான இந்த வழக்கில் எந்தவித தொடர்பும் இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதியபட்டுள்ளதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரரான மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யபட்டதோடு, மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவனத்தில் தற்போது நவீன் குமாரும், மகேஷும் பங்குதாரர்களாக இல்லை எனவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்னை மிரட்டி அலுவலகத்தில் உள்ள கணினி மற்றும் கணக்கு சம்பந்தமான ஆவணங்களை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 2 வாரங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்பு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியாவிற்கு 2 வாரங்களில் திங்கட்கிழமை மட்டும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in