இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் மூளைச்சாவு: விபத்து ஏற்படுத்திய மாணவனின் தந்தை கைது

இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் மூளைச்சாவு: விபத்து ஏற்படுத்திய மாணவனின் தந்தை கைது

சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கல்லூரி மாணவன் மூளைச் சாவு அடைந்தார். விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற 18 வயதுக்குட்பட்ட மாணவனின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஐ.சி.எஃப் காஸ்டபிள் சாலை - டங்கன் சாலை சந்திப்பில் கடந்த மாதம் 26ம் தேதி மாலை இரு கல்லூரி மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவன் தீபக் பாலாஜி (18) லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னால் அமர்ந்து சென்ற திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் லோகேஷ் (18) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் 18 வயதுக்குட்பட்டவர் என்பதும், தலைக் கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவன் லோகேஷ் மூளைச் சாவு அடைந்ததாக தனியார் மருத்துவமனை அறிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

கல்லூரி மாணவன் உயிரிழந்த நிலையில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என வழக்கை மாற்றி பதிவு செய்து, வாகனத்தின் உரிமையாளரான மற்றொரு கல்லூரி மாணவனின் தந்தை சுப்பிரமணி (52) என்பவரை திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். வாகனத்தை ஓட்டி சென்ற கல்லூரி மாணவன் தீபக் பாலாஜி 18 வயது நிரம்பாதவர் என்பதால் அவரது தந்தையை கைது செய்துள்ளதாக போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சுப்பிரமணியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in