பெண் வேடத்தில் இரவில் விடுதியில் புகுந்த 19 வயது வாலிபர்... அலறிய கல்லூரி மாணவிகள்

பெண் வேடத்தில் இரவில் விடுதியில் புகுந்த 19 வயது வாலிபர்... அலறிய கல்லூரி மாணவிகள்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இரவில் சுற்றி வந்த 19 வயது இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், மருதமலை மெயின் ரோட்டில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெண்கள் தங்கும் விடுதி பகுதியில் வாலிபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதாகவும், விடுதியில் தங்குவதற்கு அச்சமாக இருப்பதாகவும் கூறி கடந்த மார்ச் 31-ம் தேதி மாணவ, மாணவியர் பல்கலைக்கழக நுழைவுவாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் காவல்துறையில் புகார் அளித்தார். அதில், பெண்கள் விடுதி பகுதியில் சந்தேக நபரின் நடமாட்டம் இருந்ததாகவும், மாணவிகள் தங்கியிருக்கும் ஒரு அறையின் ஜன்னல் வழியாக லேப்டாப் எடுக்க முயற்சித்ததாகவும் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இன்று அதிகாலை கல்வீராம்பாளையம், டான்சா நகர் பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சுரேந்தர் (19) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் கல்வீராம்பாளையம் மாரியம்மான் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த சில நாட்களாக பாரதியார் பல்கலைக்கழக விடுதி பகுதியில் சுவர் ஏறி குதித்து சென்றதாகவும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுவர் ஏறி குதித்து சென்று லேப்டாப் திருட முயன்றதையும் சுரேந்தர் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சுரேந்தர், அடையாளம் தெரியாமலிருக்க பல்கலைக்கழக விடுதியிலுள்ள மாணவிகளின் உடைகளை தன் உடை மீது அணிந்து உலா வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுரேந்தரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in