திருமணத்துக்கு சம்மதிக்கச் சொல்லி மாணவியைத் தாக்கிய வாலிபர்

திருமணத்துக்கு சம்மதிக்கச் சொல்லி மாணவியைத் தாக்கிய வாலிபர்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சுந்தர மூர்த்தி (29), வேலைவெட்டிக்குச் செல்லாமல் சுற்றித் திரிந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியை காதல் என்ற பெயரில் பின்தொடர்வதும், வம்பிழுப்பதுமாக இருந்ததாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில், நீ என்னைத் திருமணம் செய்துகொள்' என்று வற்புறுத்தத் தொடங்கியுள்ளார். அவரது எந்த முயற்சிக்கும் மாணவி சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, அந்த மாணவியை வழிமறித்துத் தாக்கியுள்ளார்.

இதனால் காயமும், அவமானமும் அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமாமகேஸ்வரி சுந்தரமூர்த்தியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தார்.

இன்னொரு சம்பவம்

இதேபோல மற்றொரு சம்பவத்தில் காதல் என்ற பெயரில் 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபரையும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், அந்தச் சிறுமியை காதல் என்ற பெயரில் கட்டாயத் திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது. அந்த வாலிபர் ஆனையூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் தெய்வேந்திரன்(24) என்பது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல இன்னொரு 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய மதுரை பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற 30 வயது வாலிபரையும் போலீஸார் கைதுசெய்தனர். இதற்கான சட்ட நடவடிக்கைகளை மதுரை மாவட்ட சமூக நலத்துறை மேற்கொண்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in