சிறுவர், சிறுமிகளின் ஆபாசப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகச் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க தொண்டு நிறுவனம் அனுப்பிய புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அந்த மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாணவர்களிடம் செல்போன் புழக்கத்திற்கு வந்த பிறகு, ஆன்லைன் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஆபாசப் படங்களைப் பார்ப்பது, ஆபாச வீடியோ பதிவிடுவது, செல்ஃபி மோகத்தில் சாகசம் செய்து உயிரிழப்பது எனக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்று, சிறுவர் சிறுமிகளின் ஆபாசப் படங்கள் சமூகவலைதளங்களில் பரவுவதைத் தடுக்கும் வகையில் கண்காணித்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களைப் பதிவிட்டிருந்தார்.
இதைக் கண்ட அந்த தொண்டு நிறுவனம் குறிப்பிட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழகக் காவல் துறைக்குப் புகார் அனுப்பியது. சென்னை சூளை பகுதியை சேர்ந்த அந்த மாணவர் தற்போது சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தகவல் தொழில்நுட்ப முறைகேடு தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் அந்த மாணவர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.