கடத்தப்பட்ட கட்சித் தலைவர்... 2 மணி நேரத்தில் கும்பலை தூக்கியது போலீஸ்: சென்னையில் இரவில் நடந்த த்ரில்

கடத்தப்பட்ட கட்சித் தலைவர்... 2 மணி நேரத்தில் கும்பலை தூக்கியது போலீஸ்: சென்னையில் இரவில் நடந்த த்ரில்

கடத்தல் கும்பலிடம் சிக்கிய அரசியல் கட்சித் தலைவரை 2 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர். கும்பலை பிடித்த உதவி ஆய்வாளர், காவலரை நேரில் அழைத்து சென்னை காவல்துறை ஆணையர் பாராட்டினார்.

சென்னை புளியந்தோப்பு டிமலஸ்சாலை கேபி பார்க் பகுதியை சேர்ந்தவர் சாலமன் (42). இவர் இந்திய ஜனநாயக கட்சித் தலைவராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சாலமன் நேற்றிரவு கோயம்பேட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவருந்தி விட்டு வெளியே வந்தபோது ஒரு கும்பல் அவரை அடித்து உதைத்து காரில் கடத்தி சென்றது. இது குறித்து சாலமனின் நண்பர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் ரோந்து காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரை உடனே விரைந்து சென்று மதுரவாயல் பகுதியில் குடோனில் பதுங்கியிருந்த கடத்தல்காரர்களை கண்டறிந்து 4 பேரை கைது செய்து சாலமனை பத்திரமாக மீட்டனர்.

நிலம் வாங்கி தருவதாக கூறி சாலமன் 55 லட்ச ரூபாய் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்ததால் பணத்தை இழந்த அண்ணாநகரை சேர்ந்த கண்ணன் தனது நண்பர்கள் சுரேஷ், சரவணன், நாராயண மூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து சாலமனை கடத்தி சென்று தாக்கியது தெரியவந்தது.

இந்த நிலையில் 2 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து சாலமனை மீட்ட சி.எம்.பி டி ரோந்து காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரை மற்றும் ரோந்து வாகன ஓட்டுநர் காவலர் பூங்காவனம் ஆகியோரை காவல் ஆணையர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதவி ஆய்வாளர் செல்லதுரை, "நேற்றிரவு 10 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடத்தல் என்ற தகவல் வந்தவுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் எண்ணை அனுப்பி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை உயரதிகாரிகள் அலர்ட் செய்து உத்தரவு பிறப்பித்தனர். அதனடிப்படையில் கார் எண்ணை வைத்து தீவிரமாக தேடியபோது, மதுரவாயல் அபிராமி நகரில் கடத்தல் கார் நிற்பதை கண்டுபிடித்தோம். பின்னர் அங்கிருந்த ஒரு குடோனில் வந்த அலறல் சத்தம் கேட்டு அங்கு எட்டிபார்த்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் சாலமனை அடித்து கொண்டிருந்தது.

உடனே வெளி கதவை மூடிவிட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் காவலர்கள் வந்தவுடன் கதவை திறந்து உள்ளே சென்று நான்கு பேரை கைது செய்து சாலமனை உயிருடன் மீட்டோம். கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் வந்த 2 மணி நேரத்தில் கடத்தப்பட்ட நபரை மீட்டு கடத்தல் கும்பலை கைது செய்ததற்காக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வாக்கிடாக்கியில் தங்களை வெகுவாக பாராட்டியதுடன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்" என்றார்.

கடத்தப்பட்ட இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் சாலமன்
கடத்தப்பட்ட இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் சாலமன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in