
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளின் மீதான மோகம் காரணமாக வேலையில்லாத இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸார் என 32 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, கடந்த 2022 அக்டோபர் 19-ம் தேதி தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
131 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 6-ம் தேதி, ஆளுநர் அந்த மசோதாவை அரசுக்கு திரும்ப அனுப்பினார். கடந்த மார்ச் 23-ம் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மறுநாளே ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி கடந்த ஏப்ரல் 10-ம் தேதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின்படி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுக்காக விளம்பரம் செய்பவருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இது போன்ற விளையாட்டுகளை அளிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை எதிர்த்து அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், ”இந்த சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது” என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ”இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்குட்பட்டு இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் செல்லுபடியாக கூடியது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை பிறப்பித்தது. அதில் அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் செல்லும் என உத்தரவிட்டனர்.
திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் விளையாட்டுகளைத் தடை செய்த பிரிவுகளை ரத்து செய்ததோடு, ரம்மி போன்றவற்றை விளையாடுவதற்கான நேரம், வயது தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 900 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதாகவும், போனஸ் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளால் அடிமையாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி பொது ஒழுங்கை பாதிக்கச் செய்கிறது என, தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் சார்பில் நீதிபதி சந்துரு அறிக்கை அளித்திருந்தார்.
இதையடுத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் செயல்படுவதால் அவற்றை கண்காணிக்க முடியாது என்பதோடு இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்த இயலாது என்பதால் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.