உ.பி காவலர் தேர்வில் முறைகேடு... உணவு கழக அதிகாரி சென்னையில் கைது!

இந்திய உணவு கழகம்
இந்திய உணவு கழகம்

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய உணவு கழக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடர்ஸ் சாலையில் இந்திய உணவு கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8 மாதங்களாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் கண்ணுஜியா(30) என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் விடைகுறிப்பு (answer key) போலியாக தயார் செய்து விற்பனை செய்ததாக உத்திர பிரதேச மாநில கந்தராப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுகுறித்த விசாரணையில், சென்னையில் உள்ள இந்திய உணவு கழக அலுவலகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் விஜய் கண்ணுஜியா முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று இரவு சென்னை வந்த உத்தரப் பிரதேச கந்தராப்பூர் போலீஸார், சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் உதவியுடன் சூளைமேட்டில் தங்கி இருந்த விஜய் கண்ணுஜியாவை கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். இதன் பின் அவரை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அழைத்து சென்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் போலியான விடைகுறிப்பு தயாரித்து விற்பனை செய்த இந்திய உணவு கழக அதிகாரி சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in