மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை மீது 3 பிரிவில் வழக்கு!

மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை மீது 3 பிரிவில் வழக்கு!

மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சிறிய ரக பைக்கை தயார் செய்த தந்தை மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கடந்த 20 வருடத்திற்கும் மேலாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய மகன் ஆசைப்பட்டவற்றை எப்படியாவது நிறைவேற்றித் தரும் தந்தையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கேடிஎம் இருசக்கர வாகனத்தைப் பார்த்து எனக்கும் அதுபோல வண்டியை வாங்கிக் கொடுக்க வேண்டும் என மகன் வற்புறுத்தி இருக்கிறான். இதை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஒரு வருடமாகத் தந்தையே சுயமாகச் சிறிய அளவில் கேடிஎம் பைக் போல இருசக்கர வாகனத்தைத் தயாரித்துள்ளார். மேலும் இதைச் சாலையில் சோதனை செய்தபிறகு அதை மகனிடம் கொடுத்து ஓட்டச் சொல்லி இருக்கிறார். அந்த குட்டி பைக்கில் மகனை ஓட்டச் செய்து தங்கராஜ் பின்னால் அமர்ந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

இதையடுத்து, சிறுவனைச் சாலையில் இருசக்கர வாகனம் இயக்க வைத்தது, அரசு அனுமதி இல்லாமல் இருசக்கர வாகனத்தை உருமாற்றம் செய்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தங்கராஜ் மீது சேலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in