இன்ஸ்ட்டா சகவாசம்... பள்ளி மாணவி 18 பேரால் சீரழிக்கப்பட்ட கொடுமை!

இன்ஸ்ட்டா சகவாசம்... பள்ளி மாணவி 18 பேரால் சீரழிக்கப்பட்ட கொடுமை!
Updated on
2 min read

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் இன்ஸ்டா பழக்கத்தால் தனது  ஆண் நண்பர் உள்ளிட்ட 18 பேரால் கூட்டு பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமி பதினோறாம் வகுப்பு படிக்கிறார். சரளமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அந்த மாணவி இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்திருக்கிறார். இதன் வழியாக அறிமுகமான ஆண் நண்பர் ஒருவருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாற, இருவரும் போனிலேயே வீடியோ காலில் பேசி காதலைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மாணவியிடம் அந்த நபர் கேட்டுள்ளார். காதலன் மீதான நம்பிக்கையால் மாணவியும் தனது நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பி உள்ளார். அதைத்தொடர்ந்து  அந்த வாலிபர் மாணவியை தன் ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மாணவி மறுக்கவே, அவரது நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதனால் பயந்துபோன அந்த மாணவி, காதலின் கட்டாயத்துக்கு அடிபணிந்திருக்கிறார். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது அங்கு சென்று அந்த மாணவியை சீரழித்திருக்கிறார் அந்த நபர். தனது இச்சையைத் தீர்த்துக் கொண்ட அந்த நபர் அத்துடன் நில்லாமல் மாணவியின் நிர்வாண படங்களை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து அந்த நபரின் நண்பர்களும் மாணவியின் நிர்வாண புகைப்படத்தை காட்டி மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நாளுக்கு நாள் இவர்களது தொல்லை அதிகரித்து வந்த நிலையில் அந்த மாணவி பள்ளிக்குச் செல்வதையே நிறுத்தியுள்ளார்.

பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மாணவி, மிகவும் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதால் அவரது பெற்றோர்கள், குழந்தைகள் நல அமைப்பினரிடம் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு போனதும் அந்த மாணவி தனக்கு நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விவரித்திருக்கிறார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

உடனடியாக இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பத்தனம்திட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து  வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவர் சொன்னதை எல்லாம் கேட்டு அதிர்ந்து போனார்கள்.

மாணவியுடன் படித்த சில மாணவர்களையும் சேர்த்து மொத்தமாக 18 பேர் சிறுமியை பலாத்காரம் செய்திருப்பது  மாணவியின் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in