நாமக்கலம் மாவட்டம் ராசிபுரம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
கேரளாவைச் சேர்ந்த மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன் (43), கொல்லிமலை ஆரியூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி செல்வகுமார் (42), கொல்லிமலை வனவர் ரகுநாதன் (40) ஆகிய 3 பேர் நேற்று இரவு கொல்லிமலையில் இருந்து பொலிரோ காரில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பேளுக்குறிச்சி அருகே மோளப்பாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேளுக்குறிச்சி காவல்துறையினர் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் திடீரென பேருந்து நிறுத்த நிழற்குடை மீது மோதியதற்கான காரணம் என்ன என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தால் அந்த பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.