11 வயது சிறுவனின் உயிரைப் பறித்தது `ரோஸ் மில்க்': சென்னையில் மீண்டும் அதிர்ச்சி

11 வயது சிறுவனின் உயிரைப் பறித்தது `ரோஸ் மில்க்': சென்னையில் மீண்டும் அதிர்ச்சி

சென்னை கண்ணகி நகரில் மளிகைக் கடையில் விற்பனை செய்யப்பட்ட ரோஸ் மில்க்கை வாங்கி குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் வசந்தகுமார் (11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு வசந்தகுமார் வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாட சென்றுள்ளார். பின்னர் விளையாடி முடித்து விட்டு பூங்கா அருகே உள்ள பெத்துராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற உடன் வசந்தகுமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே திவ்யா தனது மகனிடம் என்ன ஆச்சு என கேட்ட போது, ரோஸ்மில்க் வாங்கி குடித்ததிலிருந்து வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

உடனே திவ்யா தனது மகன் வசந்த்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த திவ்யா இது குறித்து கண்ணகி நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார், சிறுவன் வசந்த்குமாரின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வசந்தகுமார்
வசந்தகுமார்

விசாரணையில் சிறுவன் பெத்துராஜ் என்பவர் கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பெத்துராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெத்துராஜ் கடை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் வீட்டிலேயே தாயார் செய்து கொடுத்த ரோஸ்மில்க்கை தான் வாங்கி விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் ரோஸ்மில்க் தயாரித்து கொடுத்த ஆனந்தராஜிடம் தீவிர விசாரணை நடத்தி்வருகின்றனர்.

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்த ஒரு சிறுமி, பெண் ஆகியோர் உயிரிழந்த நிலையில் தற்பொழுது ரோஸ்மில்க் வாங்கி குடித்த சிறுவன் வசந்த்குமார் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in