
கை, கால்கள் முடியாத தனது தந்தையைக் காப்பாற்ற வேறு வழி இன்றி திருட்டில் ஈடுபட்ட சிறுவனின் செயல் காவலர்களை அதிர்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 10க்கும் மேற்பட்ட கடைகளில் ஷட்டர் பூட்டை உடைத்து, பணம் மற்றும் செல்போன்கள் திருடுபோனது. இது குறித்து வியாபாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, சிறுவன் ஒருவன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் மார்க்கெட் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 14 வயது சிறுவனை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், திருவள்ளூர் அடுத்த செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவன்தான் மார்க்கெட் பகுதியில் திருடியவன் என்பது தெரிய வந்தது.
கை,கால்கள் இயங்காத நிலையில், உடல் நலம் பாதித்த அப்பா மட்டும் வீட்டில் இருப்பதும், அவரை காப்பாற்றுவதற்காக 9ம் வகுப்பு படித்தபோது, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை செய்வதற்கு முடிவெடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து வேலை கேட்டிருக்கிறான். சிறுவன் என்பதால் வேலை கொடுப்பதற்கு வியாபாரிகள் தயங்கியுள்ளனர். வேலை ஏதும் கிடைக்காததால் அப்பாவை காப்பாற்ற கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கடைகளின் பூட்டை உடைத்து திருடியுள்ளான்.
வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அசந்து தூங்குவதை பயன்படுத்தி, அவர்களது செல்போன், பணம் ஆகியவற்றையும் அவன் திருடியிருப்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார், கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அவனை அடைத்தனர். தந்தையை காப்பாற்ற திருட்டில் ஈடுபட்ட சிறுவனின் செயல் காவலர்களை அதிர்ச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!