மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் குண்டுவெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சக்திபூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு நேற்று மாலை பக்தர்கள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தில் திடீரென குண்டுவெடித்தது. இதில் ஒரு பெண் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அம்மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதே மாவட்டத்தின் ரெஜினகர் பகுதியில், ராம நவமி ஊர்வலம் மீது கற்கள் வீசப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியது.
இதுகுறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ஜெகந்நாத் சட்டோபாத்யாய் கூறுகையில், "சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது மாநில காவல்துறையின் கடமை. ஆனால் இங்குள்ள காவல்துறை இதனை செய்ய தவறியுள்ளது. எனவே காவல் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
பாஜக குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சாந்தனு சென் கூறுகையில், “தேர்தலுக்கு முன்பு கலவரங்களை நடத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களை நாங்கள் கண்டிக்கிறோம். இது பாஜகவின் வேலை "என்றார்.
ராம நவமி ஊர்வலத்தில் குண்டு வெடித்தது மற்றும் கற்கள் வீசப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.