
சென்னையில் உள்ள தமிழ பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டு அருகே கொடிகம்பம் அமைப்பது தொடர்பாக பாஜகவினருக்கும். இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது இல்லத்துக்கு அருகில், சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஜகவினர் அந்த 50 அடி உயரத்திலுள்ள பாஜக கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டு அருகே நட்டு வைத்திருந்தனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. இந்த விஷயம் தெரிந்ததுமே அங்கிருக்கும் பாஜகவினரும் ஒன்று திரண்டனர். இரு தரப்பிலும் ஒன்றாக கூடிவிட்டதால், பதற்றமான சூழ்நிலை அங்கு ஏற்பட்டது. இதனிடையே, அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் கொடிகம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும் மற்றும் இஸ்லாமியர்களும் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உட்பட போலீஸார் விரைந்து வந்து பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமூகமான உடன்பாடும் ஏற்படவில்லை. பிறகு, போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களிடமும் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதால், அதை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர். இதற்குப் பிறகு, கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக போலீஸார் ஜேசிபி வாகனத்தை வரவழைத்தனர். அதைக் கண்டு ஆவேசமான பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதனால், போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது.. இந்த கைகலப்பில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.