பாஸ்கர ராமனை டெல்லி அழைத்து செல்கிறது சிபிஐ: முதல் தகவல் அறிக்கையில் என்ன இருக்கிறது?

பாஸ்கர ராமனை டெல்லி அழைத்து செல்கிறது சிபிஐ: முதல் தகவல் அறிக்கையில் என்ன இருக்கிறது?

சீனர்களின் விசாவை நீட்டிக்க 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்ற அனுமதியுடன் டெல்லி அழைத்துச் செல்கின்றனர்.

பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் வேதாந்த குழும நிறுவனங்களின் சார்பில் டிஎஸ்பிஎல் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்திற்கு ஆலைகளை அமைக்கும் ஒப்பந்த பணிகளை செப்கோ (SepCo ) எனும் சீன நிறுவனம் மேற்கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணி புரிவதற்காக 263 சீன நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ப்ராஜெக்ட் விசாவில் இந்தியா வந்துள்ளனர்.

இந்த தனியார் அனல்மின் நிலையத்தின் பணிகள் நிறைவு பெறாததால், ப்ராஜெக்ட் விசாவில் வந்த சீன நாட்டினரின் விசாவை நீட்டிப்பு செய்ய அந்நிறுவனம் முயன்றது. அதன்படி, சீன நாட்டினர் 263 பேருக்கு விசா காலம் நிறைவு பெற்றதால் அதை நீட்டிக்க அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவரை டிஎஸ்பிஎல் அனல் மின் நிலைய நிறுவனத்தின் நிர்வாகி விகாஷ் மஹாரியா அணுகியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் இருந்து இ-மெயில் மூலம் விசா நீட்டிப்பு செய்வதற்கான விண்ணப்பம் கடிதத்தை கார்த்தி சிதம்பரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன்படி, கார்த்திக் சிதம்பரம் விசா நீட்டிப்பு செய்ய 50 லட்சம் லஞ்சம் பெற்று அனுமதி கடிதம் வாங்கி கொடுத்துள்ளதாகவும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

2010-ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான், மின் மற்றும் இரும்பு உற்பத்தி தொழில் மேற்கொள்ள வரும் வெளிநாட்டினருக்காக ப்ராஜெக்ட் விசா அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான புதிய விதிகள் வகுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ, ஆனால் அந்த விதிகளை மீறி லஞ்சம் பெற்றுக்கொண்டு ப்ராஜெக்ட் விசா நீட்டிப்பிற்கான அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கான லஞ்ச பணத்தை மும்பையைச் சேர்ந்த பெல் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலமாக, டிஎஸ்பிஎல் நிறுவனம் பரிவர்த்தனை செய்துள்ளதை கண்டுபிடித்த சிபிஐ இந்த முறைகேடு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரின் கவனத்தை மீறி நடந்திருக்க வாய்ப்பில்லை என சந்தேகம் எழுப்பியுள்ளது.

மேலும், ப.சிதம்பரம் ஸ்டெர்லைட் வேதாந்தா குழும நிறுவனத்திற்கு போர்டு உறுப்பினராக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ, மும்பையில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து சென்னையில் இயங்கிய மெல்ட்ராக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்கு 1.5 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்திருப்பதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் வேதாந்தா குழுமம் நிறுவனமான டிஎஸ்பிஎல் அணுமின் நிலைய நிறுவனத்திற்கு விசா வழங்கியதில் முறைகேடு நடத்திருக்க முகாந்திரம் உள்ளதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன், டிஎஸ்பிஎல் நிறுவன நிர்வாகி விகாஸ், மும்பையை சேர்ந்த பெல் நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத உள்துறை அமைச்சக ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, பாஸ்கர ராமனை டெல்லி அழைத்து செல்ல சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in