
காதலியின் திருமணத்தை நிறுத்த காதலியின் தந்தையை கத்தியால் குத்திய காதலன் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட இரு இளைஞர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம், போடி நகர் பகுதியை சேர்ந்த சுருளிராஜ் மகள் சுபாஷினியை போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபாஷினிக்கு அவரது வீட்டில் வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க சுருளிராஜ் முடிவெடுத்துள்ளார்.
காதலியின் வீட்டில் ஒரு மரணம் ஏற்பட்டால் திருமணம் நின்று விடும் என்பதால், சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுருளிராஜை கார்த்திக் மற்றும் அவரது நண்பரான சுகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சுருளிராஜ், தேனி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2013-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் சுகுமார் ஆகிய இருவரும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வி.சுரேஷ் உத்தரவிட்டார்.