பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி பாடல் வெளியிட்டதற்காக இளைஞர் மீது ஒரு ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டு கடந்த வாரம் பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இவரை ஒரு கும்பல், நேற்று கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மைசூருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே லட்சுமி நாராயணன் வரும் போது ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது. இத்துடன் லட்சுமி நாராயணனின் ஆடைகளைக் கிழித்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்புமாறு லட்சுமி நாராயணனை அந்த கும்பல் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் தாக்கியதில் காயமடைந்த லட்சுமி நாராயணனை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட லட்சுமி நாராயணன், லட்சுமிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில்," கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி பாடலை வெளியிட்டிருந்தேன். இந்த நிலையில், தெரிந்த ஒருவருடன் எங்கள் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து கொண்டிருந்தேன். அரசு விருந்தினர் மாளிகை அருகே ஒருவர் வந்தார். அப்போது அவர் அந்த வீடியோவை பார்த்துள்ளார்.
அப்போது என்னை உள்ளே அழைத்துச் சென்று கூட்டாளிகளுடன் சேர்ந்து மோடியை பற்றி பாடியிருக்கிறாயா, உன்னை இங்கேயே கொன்று விடுவோம் என்று கூறி தாக்கினர். ராமரின் புகைப்படத்தையும், என் கையில் இருந்த கொடியையும் கிழித்து எறிந்தனர். அப்போது என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், என் மீது பீரைக் கொட்டி சிறுநீர் கழித்தனர். அத்துடன் சிகரெட்டால் சுட்டதுடன் கொடூரமாக தாக்கினார்கள்" என்று கூறினார்.
மோடி பாடலை வெளியிட்ட இளைஞரை தாக்கிய கும்பல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மைசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.