சம்பள உயர்வு கோரி போராடிய அங்கான்வாடி ஊழியர்கள் மீது தடியடி - எதிர்க்கட்சிகள் கண்டனம்!

சம்பள உயர்வு கோரி போராடிய அங்கான்வாடி ஊழியர்கள் மீது தடியடி - எதிர்க்கட்சிகள் கண்டனம்!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஊதிய உயர்வு கோரி அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை, காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.

பீகாரில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. ஊதிய உயர்வு, பணிக்கொடை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்வர் நிதிஷ்குமார் அரசைக் கண்டித்தும் அங்கன்வாடி ஊழியர்கள் பாட்னாவில் இன்று சட்டப்பேரவை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகும்படி போலீஸார் கோரினர். இதை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்க மறுக்கவே தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் தடியடி நடத்தியும் அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர். இதில் பெண் ஒருவர் மயக்கமடைந்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவமான ஊதிய உயர்வு வழங்கக் கோரியும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர். தொழிலாளர்களுக்கு பணிக்கொடை பலன் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பீகார் அரசு அதைப் பரிசீலிக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர். 'ரூ.5000 வைத்து யாரால் உயிர் வாழ முடியும்? உரிமைகளைக் கேட்டால் இப்படி மோசமாக நடத்தப்படுகிறோம். எங்களுக்கான கௌரவமான ஊதிய உயர்வு வழங்காதவரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம்' எனப் போராட்டக்காரர்கள் கூறினர்.

அங்கன்வாடி ஊழியர்களின் மீது தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பாஜக தலைவர் ஷேஜாத் பூனாவல்லா, பீகார் அரசைக் கடுமையாக சாடினார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'காட்டாட்சியாக இருந்த நிதிஷ் குமாரின் அரசு தற்போது தடியடி அரசாக மாறியுள்ளது. ஐக்கிய ஜனதா தள அரசில் நடைபெறும் அனைத்து போராட்டங்களும் இப்படி கொடூரமாக ஒடுக்கப்படுகின்றன. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி அங்கன்வாடி ஊழியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து பிரிவினரும் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in