
அண்ணாமலையின் நண்பரும், பாஜக விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவருமான் அமர்பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 20ம் தேதி அன்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இல்லத்தின் முன் பாஜக கொடிகம்பம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காவல்துறையினர் கிரேன் மற்றும் ஜேசிபி வாகனங்களின் உதவியுடன் கொடிகம்பத்தை போலீசார் அகற்றினர். அப்போது அங்கிருந்த பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை பாஜகவினர் அடித்து நொறுக்கியதால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ஒருவரின் மண்டை உடைந்த நிலையில் பாஜகவினரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்ததுடன் அங்கிருந்த கொடிக்கம்பத்தையும் அகற்றினர்.
இந்த நிலையில் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவரும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நண்பருமான அமர்பிரசாத் ரெட்டியை கடந்த அக்டோபர் 21ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக என் மீது காவல்துறை முடிந்தால் கை வைத்து பாருங்கள், தொட்டுப்பார் என அமர்பிரசாத் ரெட்டி பேசும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி இருந்தன.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்கவிழாவின் போது முதலமைச்சர் புகைப்படத்தை அகற்றி பிரதமர் புகைப்படத்தை ஒட்டிய விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வரும் அக்டோபர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது