
நாமக்கல் அருகே வழக்கறிஞர் ஒருவர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
வழக்கறிஞர் மணிகண்டன், முட்டாஞ்செட்டி பிரிவு அருகே வந்த போது, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற எருமப்பட்டி போலீஸார், மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் சக வழக்கறிஞர்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.