என்.ஜி.ஓக்களுக்கு முறைகேடாக அனுமதி: சிக்கிய மத்திய உள்துறை அதிகாரிகள்

என்.ஜி.ஓக்களுக்கு முறைகேடாக அனுமதி: சிக்கிய மத்திய உள்துறை அதிகாரிகள்

வெளிநாட்டு பங்களிப்பு சட்ட ஒழுங்கு முறை விதிகளை மீறி தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்த மத்திய அரசு ஊழியர்கள் உட்பட 14 பேரை கைது செய்துள்ள சிபிஐ, 3.12 கோடி பணம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டப் பிரிவில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள், என்.ஜி.ஓக்கள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, சில அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டது தெரியவந்தது. குறிப்பாக இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல் மற்றும் விதிகளை மீறி வெளிநாட்டிலிருந்து நிதிகளை பெறுவது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. அவ்வாறாக வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதியை போலி ஆவணங்கள் மூலம் தவறாக கணக்கு காட்ட உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட பிரிவின் அதிகாரி பிரமோத்குமார் பஸின், பல தொண்டு நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்று, அதற்கு அங்கீகாரம் வழங்கியதும், புதுப்பித்தலுக்கும், உடந்தையாக இருந்ததுடன் தன் பெயரில் மட்டுமன்றி பல உள்துறை அமைச்சக அதிகாரிகள் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து என்ஜிஓக்களிடமிருந்து ஹவாலா மூலம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடிப்படையாக கொண்டு நேற்று நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனை அடிப்படையில் மத்திய அரசு அதிகாரிகள் ஹவாலா தரகர்கள் தொண்டு நிறுவன நிர்வாகிகள் என 33 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் 6 பேர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆவர். தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், இமாசல பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் எலெக்ட்ரானிக் ஆவணங்கள், செல்போன்கள் மற்றும் 3.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சோதனையில் கோயம்புத்தூரில் உள்ள கங்கா ஆர்தோபெடிக் ஆராய்ச்சி மற்றும் கல்வி பவுண்டேஷனுக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவில் புதுப்பித்தலுக்கான அனுமதி வழங்குவதற்கு பவுண்டேஷனை சேர்ந்த ராஜசேகரன் மற்றும் சார்ட்டட் அக்கவுன்டன்ட் வாகிஸ், சுகுணா ரவிச்சந்திரன் ஆகியோர் மூலம் 4 லட்ச ரூபாய் லஞ்சப் பணத்தை சென்னையைச் சேர்ந்த ஹவாலா தரகர் ராமானந்த் பரீக்கிடம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை ஹவாலா முறையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டப்பிரிவு ஆணையத்தின் அதிகாரியான பிரமோத் குமார் பஸின் என்பவருக்காக கொடுக்கப்பட்ட லஞ்சம் என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. மத்திய அரசு அதிகாரியான பிரமோத் குமார் பஸின் சார்பில் பல இடைத்தரகர்கள் மூலம் லஞ்சப் பணம் கைமாறும்போது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தொடர் விசாரணையில் மத்திய அரசு அதிகாரியான பிரமோத் குமார் பஸின் பல இடைத்தரகர்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களை தொடர்புகொண்டு அங்கீகாரம் வழங்கவும் புதுப்பித்தலுக்கான அனுமதி வழங்கவும் லஞ்சம் கேட்டதும், அதற்கு சில என்.ஜி.ஓக்கள் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் அணிஸ் செல்வராஜ் என்ற தரகர் மூலம் மாமல்லபுரத்தில் உள்ள சர்ச் ஆப் க்ரிஷ்ட் சாரிட்டபிள் அறக்கட்டளையை சேர்ந்த துரைராஜ் என்பவரிடமும்,

கடலூரில் உள்ள மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த சின்னப்பன் பிச்சை பிள்ளை என்பவரிடம் புதுப்பித்தல் அனுமதிக்காக 2 லட்சம் ரூபாயும்,

இதேபோல் நீலகிரியில் உள்ள மத்திய பழங்குடியின மற்றும் ஊரக வளர்ச்சி அறக்கட்டளையை புதுப்பித்தலுக்காக ரூ.5 லட்சமும், சென்னை வேப்பேரியில் உள்ள இந்தியா எவ்ரி ஹோம் க்ரூஸ்டே என்ற அமைப்பிற்கு புதுப்பித்தலுக்காக அதன் ஆடிட்டர் பொன் பாண்டி இன்பரசியிடம் லஞ்சம் கேட்டதும், இதேபோல் நுங்கம்பாக்கத்தில் உள்ள ரவுண்ட் டேபிள் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த இளங்கோவிடம் புதுப்பித்தலுக்காக ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டது என பல தகவல்களை

சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் 6 என்.ஜி.ஓக்களை புதுப்பித்தல் அனுமதிக்காக மிரட்டி லஞ்சம் கேட்டதும், அதில் சில என்ஜிஓக்கள் முறைகேடாக லஞ்சம் கொடுத்து அனுமதி பெற முயற்சி செய்ததும் விசாரணையில் அம்பலமானது. அதன் அடிப்படையில்

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டவிதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

அதில், ராஜசேகரன், பொன்பாண்டி இன்பரசு, வாகீஸ், சுகுனா ரவிச்சந்திரன், ராபின் தேவதாஸ், சின்னப்பன் பிச்சை பிள்ளை, ராமசுவாமி ரங்கநாதன் மற்றும் ஹவாலா தரகர்கள் ராம்நாத் பரிக், அணிஸ் செல்வராஜ் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 9 பேர்களில் ஹவாலா தரகர்கள் ராமானந்த் பரிக், ராபின் தேவதாஸ் மற்றும் வாகீஸ் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. இதே போன்று இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இடைத்தரகர்கள் மூலமாக பல என்.ஜி.ஓக்களிடம் மிரட்டி லஞ்சம் கேட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட என்.ஜி.ஒ.வை சேர்ந்தவர்கள், இடைத்தரகர்கள், உள்ளிட்டோர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த சோதனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் 6 பேர் உட்பட மொத்தம் 14 பேரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முறைகேடாக அனுமதி பெற்று எவ்வளவு கோடி ரூபாய் என்.ஜி.ஓக்கள் பெற்றுள்ளனர் என்பது குறித்தும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in