டூப்ளிகேட் சாவி... அசாத்திய துணிச்சல்... பக்கத்து வீட்டில் நகை திருடிய இளம்பெண்!

சுப்புலட்சுமி
சுப்புலட்சுமி

தனது மாமியார் வீட்டிற்கு பக்கத்து வீட்டில், மிக நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட இளம்பெண் ஒருவர்,  அவர்கள் வீட்டில் யாருமில்லாத போது, கள்ளச்சாவி போட்டு நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் பூமாதேவி ( 46). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தமிழரசி. இவருடைய மருமகளான தண்டையார் பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சுப்புலட்சுமி (28) என்பவர் தனது  மாமியாரை பார்ப்பதற்காக அடிக்கடி புதுவண்ணாரப்பேட்டை வந்து சென்றார்.

அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூமாதேவியுடன் சுப்புலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. மகள் போல நெருங்கிக் பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி பூமாதேவி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.  பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகைகள் மட்டும் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில்  சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர். அவர் பூமாதேவி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். 

ஏற்கனவே பூமாதேவி வீட்டுக்கு சென்ற சுப்புலட்சுமி, அவரது வீட்டின் ஒரு சாவியை திருடி வைத்துக்கொண்டார். பின்னர்   பூமாதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாற்று சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். ஆனால் பீரோவை  திறக்க முடியாததால் அதன் சாவியை தொலைத்து விட்டதாக பீரோவை பழுது பார்க்கும் நபரை அழைத்து வந்து பீரோவை திறந்து அதிலிருந்த நகையை  திருடியுள்ளார். 

இதையடுத்து சுப்புலட்சுமியிடம் இருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in