இன்று திருவாரூரில் பயிற்சி பெண் மருத்துவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில், திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகுமார் என்பவரது மனைவி கனகவல்லி (வயது 38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனகவல்லி, கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை என ம்ருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.