`சர்ப்ரைஸ் தரப்போகிறேன்; கண்ணை மூடு'- இளம் பெண்ணால் வாலிபருக்கு நடந்த கொடூரம்

`சர்ப்ரைஸ் தரப்போகிறேன்; கண்ணை மூடு'- இளம் பெண்ணால் வாலிபருக்கு நடந்த கொடூரம்

சர்ப்ரைஸ் தரப்போகிறேன் என்று கூறி நிச்சயிக்கப்பட்ட வாலிபரை தனியாக மலைப் பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்துள்ளார் இளம் பெண். இந்த கொடூர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், அனாகபள்ளியை சேர்ந்தவர் ராமாநாயுடு (28). எம்.டெக் படித்துள்ள இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராதிகமாட்டம் கிராமத்தை சேர்ந்த புஷ்பாவுக்கும் (22) நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்களது திருமணம் மே 26-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனிடையே, திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார் புஷ்பா. இதனை கண்டுகொள்ளாமல் பெற்றோர், திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

திருமணம் நெருங்கி வந்த நிலையில், உறவினர்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக வெளியூர் சென்றனர் புஷ்பாவின் பெற்றோர். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புஷ்பா, ராமா நாயுடுக்கு போன் செய்து சர்ப்ரைஸ் பரிசு தருவதாகவும், உடனே வாருங்கள் என்றும் அழைத்துள்ளார். வருங்கால மனைவி அழைப்பதால் விரைந்து வந்துள்ளார் ராமா நாயுடு. இவரும் அங்குள்ள மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர், உனக்கு சர்ப்ரைஸ் தரப் போகிறேன். கண்ணை மூட வேண்டும் என்று புஷ்பா கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது துப்பட்டாவால் ராமா நாயுடுவின் கண்ணை கட்டியுள்ளார் புஷ்பா. அடுத்து நிமிடமே தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் ராமா நாயுடுவின் கழுத்தை அறுத்துள்ளார். துடிதுடித்த ராமா நாயுடுவை புஷ்பாவே தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் விசாரித்தபோது, ராமா நாயுடு தடுக்கி கத்தி மீது விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார் புஷ்பா.

இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியபோதுதான் அனைத்தும் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே ராமா நாயுடுவை புஷ்பாவுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவரை கொலை செய்ய புஷ்பா திட்டமிட்டுள்ளதாகவும் தனி ஆளாக இதனை அவர் செய்திருக்கிறார் என்றும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, புஷ்பாவை கைது செய்த காவல் துறையினர், காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in