அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

கொலை செய்யப்பட்ட பிரவீன், தற்கொலை செய்த ஷர்மிளா
கொலை செய்யப்பட்ட பிரவீன், தற்கொலை செய்த ஷர்மிளா

சென்னையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவி தற்கொலைக்கு முன் எழுதிய அதிர்ச்சி கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பிரவீன் (25). மெக்கானிக். இவரும், பிபிஏ பட்டதாரியான ஷர்மிளா(22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு ஷர்மிளாவின பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையும் மீறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிரவீனும், ஷர்மினாவும் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

இதன்பின் பிரவீன் வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி இரவு பிரவீன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிரவீன் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இக்கொலை தொடர்பாக ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மாமனார், மாமியார் ஆகியோருடன் வசித்து வந்த ஷர்மிளா,பிரவீன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 14-ம் தேதி ஷர்மிளா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து பதறிப்போன உறவினர்கள் உடனடியாக ஷர்மிளாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு எட்டு நாளாக சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா இரவு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பள்ளிக்கரணை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸார் ஒருதரப்பு சார்பாக நடந்து கொண்டதால் தான், ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ஷர்மிளாவின் வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது ஷர்மிளாவின் டைரியை கைப்பற்றினர். இதில் ஷர்மிளா இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், 'என்னால் என் கணவர் பிரவீன் இல்லாமல் இருக்க முடியல. நான் சாகப் போறேன். என் சாவிற்கு காரணம் தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான்.

கொலை செய்யப்பட்ட பிரவீன், தற்கொலை செய்த ஷர்மிளா
கொலை செய்யப்பட்ட பிரவீன், தற்கொலை செய்த ஷர்மிளா

பிரவீனை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. எங்களை வாழ விடாம பண்ணிட்டாங்க. அவன் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்" என உருக்கமாக எழுதியிருந்தது. இந்த கடிதத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in