
இஸ்ரேல் நாட்டில் நடந்த இசைநிகழ்ச்சியில் காதலனுடன் பங்கேற்ற இளம்பெண் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தி செல்லும் போது அந்த பெண் அவர்களிடம் ‘ப்ளீஸ் கொன்னுடாதீங்க’ என கதறும் வீடியோ பார்ப்போர் நெஞ்சை பதற வைத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 25 வயதான நோவா அர்காமணி என்ற இளம்பெண், அவருடைய காதலர் அவி நாதனுடன் இசைதிருவிழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது, அவர்களை ஹமாஸ் அமைப்பினர் பிடித்து, தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து, அர்காமணி என்ற பெண்ணை ஹமாஸ் அமைப்பினர் கொண்டு வந்த பைக்கில் கட்டாயப்படுத்தி அமர வைத்து கடத்திச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண், “ப்ளீஸ் என்னை கொன்னுடாதீங்க” என்று அந்த அமைப்பினரிடம் கெஞ்சிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் பார்ப்போர் மனதை பதற வைத்துள்ளது.
இதேபோல இஸ்ரேலில் அமைதி வேண்டி காஸா மற்றும் இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை நோவா திருவிழா நடந்துள்ளது. இதில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியுடன் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு, அமைதி வேண்டி கலந்து கொண்ட மக்கள் ஆடி, பாடி, குடித்து அமைதி வேண்டும் என கோஷம் எழுப்பியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஹமாஸ் அமைப்பினர் யாரும் எதிர்பார்க்காத வேளையில் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியது. இதனால், அமைதி வேண்டி நடந்த கூட்டம் அமைதியின்றி தெறித்து ஓடியது. இதில், 600-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அந்த தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் உடலை அரை நிர்வாணப்படுத்தி, ஹமாஸ் போராளிகள் தங்களது திறந்த ட்ரக்கில் நகரம் முழுவதும் எடுத்து சென்றுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய அமைப்பினர் பொதுமக்களை கொன்று பிணைக் கைதிகளாக பிடித்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் உடல்களை திறந்த லாரிகளில் ஏற்றி ஊர்வலம் சென்ற வீடியோக்களும் இணையத்தில் பரவி அதிர்ச்சியை அளிக்கிறது.