
சென்னையில் செல்போன் பேட்டரி மற்றும் எல்இடி பேட்டரி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் செல்போன் பேட்டரி மற்றும் எல்இடி பேட்டரி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பெரியமேடு சைடனாம்ஸ் சாலையில் சொந்தமான குடோன் உள்ளது. நேற்று ஆயுதபூஜை என்பதால் தினேஷ் தனது ஊழியர்களுடன் குடோனில் ஆயுதபூஜையை விமரிசையாக கொண்டாடியுள்ளார். பின்னர் இரவு குடோனை பூட்டிவிட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவு திடீரென குடோனின் முதல் தளத்தில் தீபிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டை, எஸ்பிளனேடு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் இருந்து 5 தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். அதற்குள் தீ இரண்டாவது மாடியில் உள்ள செல்போன் பேட்டரி குடோனுக்கு பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பின்னர் 3 மணிநேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த தீவிபத்தால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த தீவிபத்து குறித்து பெரியமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் முதல் தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு பின்னர் தீ குடோனுக்கு பரவியது தெரியவந்தது. குடியிருப்பில் பகுதியில் அமைந்துள்ளது குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்குள் ஆகினர்.