உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டியல் சமூக சிறுமியைப் பலாத்காரம் செய்து, அவரது தந்தையைக் கொலை செய்ததாக பாஜக மாவட்ட தலைவர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாவட்ட தலைவராக இருப்பவர் மசூம் ராசா ராஹி. இவர் சந்தக்பீர் நகரில் வாடகை வீட்டில் வசித்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரின் மூத்த மகளான 17வயது சிறுமியை ஆகஸ்ட் 28ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைப் பார்த்து தனது மகளைக் காக்க எதிர்த்து போராடிய சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தனது மகளை மசூம் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், தடுத்த தன்னை தாக்கியதாக வாக்குமூலம் அளித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஆனால், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதரமற்றவை என்று மசூம் கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் மீது சதர் கோட்வாலி போலீஸார், 302,376,354,452,323,504,506 மற்றும் 3/4 3(2)வி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாஜக மாவட்ட கன்வீன்ர் சஞ்சய் பாண்டே கூறுகையில்," மசூம் மீது கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து கட்சியின் மாநில தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாநில தலைமை அறிவுறுத்தல்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி வழங்கப்படும்" என்றார்.
சிறுமியை பலாத்காரம் செய்து அவரது தந்தையை கொலை செய்த வழக்கில் பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சிக்கியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.