
சென்னையில் வீட்டில் டிபன் பாக்ஸில் பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், ரவுடியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக்(27). இவர் ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவியும் பிள்ளையும் உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கார்த்தி சென்னை வில்லிவாக்கம் பொன்னன் கிணறு தெரு பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி தினமும் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக் தனது மனைவி சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சுகந்தி உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்ததன் பேரில் வில்லிவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சுகந்தி மற்றும் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த கார்த்தி போலீஸாரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கார்த்திக் அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததால், அவர் போதையில் உளறுவதாக நினைத்து போலீஸார் காலையில் விசாரணைக்கு வருமாறு கூறிவிட்டு சென்றனர்.
ஆனால் கார்த்திக் இன்று காலை விசாரணைக்கு வராததால் வில்லிவாக்கம் போலீஸார் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தியதுடன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது டிபன் பாக்ஸில் மறைத்து வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் கார்த்திக்கை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கார்த்திக் மீது கிருஷ்ணகிரி, ரத்தனகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் கார்த்தி எதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்துள்ளார். யாரேனும் கொலை செய்வதற்காக சென்னையில் வந்து வீடு எடுத்து தங்கியுள்ளாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.