தேர்வு அனுமதிச் சீட்டை ஆடு தின்றதால் மனமுடைந்து கடிதம் எழுதி வைத்து விட்டு 9-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பசவ கல்யாணின் உள்ள கோகுல கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தேர்வு அனுமதி சீட்டை ஆடு ஒன்று தின்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி ரேவதி, தேர்வு அனுமதி அட்டை இல்லாமல் பள்ளிக்கு வரமுடியாது என பள்ளி தலைமையாசியருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நான் இறக்கப்போகிறேன். இதற்காக நான் வருந்துகிறேன் என்று எழுதி தனது மூத்த சகோதரரிடம் கொடுத்து விட்டு நேற்று இரவு 7 மணியளவில் காணாமல் போனார்.
அவர் காணாமல் போனதை அறிந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரவு 11.30 மணியளவில் உறவினர் ஒருவரது வீட்டுக் கிணற்றுக்குள் இருந்து ரேவதியின் அழுகை சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் கிணற்றில் இருந்து ரேவதியை மீட்டனர்.
சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால் சிறுகாயங்களுடன் ரேவதி உயிர் தப்பினார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.