
போடி அருகே கர்ப்பிணி உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது கணவர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் – சரண்யா தம்பதிக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகிறது. இவர்களுக்கு இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது. சரண்யா தற்போது 8 மாத கரப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், தீபாவளி அன்று இரவு உறங்கிய சரண்யா, மறுநாள் காலை படுக்கையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனை கொண்டு சென்ற போது, மரணத்தை அவரது மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சரண்யாவின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து உத்தமபாளையம் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது கணவன் வீரக்குமார் தனது குழந்தையுடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
எனவே, சரண்யாவை அவரது கணவர் கொலை செய்தாரா அல்லது சரண்யா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.