
மாயக்கண்ணாடி மூலம் பெண்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்று கூறி 72 வயது முதியவரை மோசடி கும்பல் ஏமாற்றி ரூ.9 லட்சத்தை பறித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் அவினாஷ் குமார் சுக்லா (72). இளம் பெண்கள் மீது ஆசைக் கொண்டவராக இருந்து வந்த இவரது செயலை அறிந்தவர்கள், இவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சிங்கப்பூரை சேர்ந்த பிரபல பழங்கால பொருட்களை சேமிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று கூறிக் கொண்டு, அவர்கள் சுக்லாவை அணுகியுள்ளனர். தங்களிடம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பயன்படுத்தும் மாயக்கண்ணாடி இருப்பதாக கூறி அவரை நம்ப வைத்துள்ளனர். இந்த கண்ணாடி மூலமாக பெண்களை நிர்வாணமாக பார்க்க முடியும் என்றும், எதிர்காலத்தையும் கணிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மாயக்கண்ணாடியின் விலை ரூ.2 கோடி வரை இருக்கும் என்றும், கூட்டாக பணத்தை பங்கிட்டு அந்த கண்ணாடியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சுக்லாவிடம் கூறியுள்ளனர். அவரும் இதனை நம்பி தனது பங்காக ரூ.9 லட்சம் வரை கொடுத்துள்ளார். இந்த பண பரிவர்த்தனை ஒடிசாவில் நடந்துள்ளது.
ஒருகட்டத்தில் முதியவருக்கு மாயக்கண்ணாடி என்ற ஒரு பொருளை அவர்கள் கொடுத்துள்ளனர். நாட்கள் செல்லச் செல்ல இது மோசடி என்பதை உணர்ந்த சுக்லா, தனது பணத்தை திரும்பக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுள்ளார்கள். அவர்கள் மிரட்டியதைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார் சுக்லா.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவினாஷ் குமார் சுக்லாவை மிரட்டியது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பார்த்தா சிங்காராய், மோலயா சர்க்கார், சுதிப்தா சின்ஹாராய் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் இதே போன்று மேலும் சிலரிடமும் கைவரிசை காட்டி பணத்தை சுருட்டியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 செல்போன், கார், ரூ. 28 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.