
சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை வியாசர்பாடி முல்லைநகரில் இருந்து 6 பேரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று மூலக்கொத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை வியாசர்பாடியை சேர்ந்த ஓட்டுநர் பவுல் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வியாசர்பாடி இராமலிங்கம் கோயில் மேம்பாலத்தின் கீழ் ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றை முந்தி செல்ல முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையில் திடீரென தலை குப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோ கடுமையாக சேதம் அடைந்த நிலையில் ஓட்டுநர் பவுலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் ஆட்டோவில் பயணம் செய்த ஆறு பேருக்கும் காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் 7 பேரையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சாலையில் ஆட்டோ கவிழ்ந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போக்குவரத்து போலீஸார், ஆட்டோவை அப்புறப்படுத்தியதோடு, போக்குவரத்து நெரிசலையும் சீராக்கினர். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.