அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

குழந்தை
குழந்தை

கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் கொதிக்கும் வெந்நீர் கொட்டியதில் 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சாம்ராஜ்நகா் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சத்தேகாலா கிராமத்தை சேர்ந்தவர் கிரண். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 வயதில் திருவந்த் நாயக் என்ற மகன் இருந்தான். நேற்று முன்தினம் கிரண் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவியும், மகன் திருவந்த் நாயக்கும் மட்டும் இருந்தனர்.

இந்த நிலையில் மதியம் குழந்தை திருவந்த் நாயக்கை குளிக்க வைக்க, கிரணின் மனைவி வெந்நீர் வைத்தார். பின்னர் கொதிக்கும் வெந்நீரை ஒரு வாளியில் நிரப்பி தொட்டி அருகே வைத்துவிட்டு டவல் எடுத்துவர அவர் வீட்டுக்குள் சென்றார். அப்போது குழந்தை திருவந்த் நாயக், தொட்டி அருகே விளையாடி கொண்டிருந்தான். அந்த சமயத்தில் வாளியில் இருந்த வெந்நீரில் திருவந்த் நாயக் கைவிட முயன்றான். அப்போது எதிர்பாராதவிதமாக வாளி சாய்ந்து, கொதிக்கும் வெந்நீர் திருவந்த் நாயக் உடல் மீது கொட்டியது. இதனால் வெந்நீர் சூடு தாங்காமல் சிறுவன் கதறி அழுதான். மேலும் வெந்நீர் கொட்டியதில் சிறுவனின் உடல் முழுவதும் வெந்துபோனது. பின்னர் சிறுவனை தூக்கி கொண்டு அவனின் தாய் கொள்ளேகால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

குழந்தை
குழந்தை

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவந்த் நாயக், மைசூரு கே.ஆர். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திருவந்த் நாயக் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் உடலை பார்த்து அவனது தாய் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெந்நீர் கொட்டி குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in