ஆரோவில் பகுதியிலிருந்து பிரான்ஸ்க்கு கடத்த முயன்ற 20 பழங்கால சிலைகள்: அதிரடியாக மீட்டது காவல்துறை!

ஆரோவில் பகுதியிலிருந்து பிரான்ஸ்க்கு கடத்த முயன்ற 20 பழங்கால சிலைகள்: அதிரடியாக மீட்டது காவல்துறை!

ஆரோவில் பகுதியிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு கடத்த முயன்ற 20 பழங்கால சிலைகள் மற்றும் கைவினை பொருட்கள் மீட்கப்பட்டது.தப்பி ஓடிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குற்றவாளியை சிலைகடத்தல் பிரிவு போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள ஆரோ ரச்சனா கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பழங்கால சிலைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடையில் சோதனை மேற்கொண்டனர்.. சோதனையில் பிரான்சை சேர்ந்த ஒருவர், 20 பழங்கால சிலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை பிரான்ஸ் நாட்டுக்கு கடத்துவதற்காக இந்தியத் தொல்லியல் துறையில் அனுமதி சான்றிதழ் பதிவு செய்ய திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற சான்றிதழில் பதிவான முகவரியை வைத்து ஆரோவில் பிரெஞ்சு நேஷனல் வளாகத்தில் உள்ள பிரெஞ்சு நாட்டவரான டானா ஆரோவை தேடிசென்ற போது, அங்கு 13 கல் சிலைகள், 4 உலோக சிலைகள், 1 மர கலைப்பொருட்கள்,1 ஓவியம் உள்ளிட்ட 20 கலைப்பொருட்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

குறிப்பாக உலோக விநாயகர் சிலை, கிருஷ்ணன் ஓவியம் டொயினிக் கார்டனில் இருந்து நடமாடும் அப்சரா மரம், பெரிய பிள்ளையார், நடுத்தரப் பிள்ளையார், சிறிய பிள்ளையார், பெரிய புத்தர் சிலை, நடனமாடும் அப்சரா சிலை, விஷ்ணு கல் சிலை, பார்வதி கல் சிலை, ஐயப்பன் கல் சிலை சிறியது, பெரியது, நந்தி கல் சிலை, கையில் கத்தியுடன் கல் சிலை, டரகோட்டா புத்தர் சிலை, உரையுடன் கூடிய வெண்கல சொம்பு, மயில் விளக்கு அனுமன் சிலை, முருகன் சிலை ஆகிய 20 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட 20 சிலைகளையும் பிரான்ஸ் நாட்டிற்கு கடத்த திட்டமிட்டிருப்பதும் தொல்லியல் துறை சான்றிதழ் வழங்காததால் சிலைகள் அங்கேயே விட்டு சென்றிருப்பதும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலைகளை வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர் தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 20 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது? எப்போது திருடப்பட்டது? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in