கிரிப்டோகரன்சியில் 1.45 கோடி முதலீடு: சென்னை காவலர்களுக்கு நடந்த சோகம்

கிரிப்டோகரன்சியில் 1.45 கோடி முதலீடு: சென்னை காவலர்களுக்கு நடந்த சோகம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இது போன்ற கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாறுவது வேதனை அளிப்பதாகவும் இதுபோன்ற செயலியில் பணம் கட்டி ஏமாற வேண்டாம் எனவும் அனைத்து காவலர்களுக்கும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். கரோனா காலத்தின் போது காவலர்கள் அறிவுரைகளை பின்பற்றி நடந்ததால் கரோனா நோயிலிருந்து விடுபட்டு இருந்ததாகவும், தற்போது மீண்டும் கரோனா பரவ தொடங்கி இருப்பதால் அனைத்து காவலர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் சென்னையில் பணிபுரியும் காவலர் ஒருவர் ரம்மி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு சம்பாதித்த அனைத்து தொகையையும் இழந்து தற்கொலை செய்து கொண்டதும், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவல நிலை ஏற்பட்டதாகவும், எனவே இது போன்ற தீய பழக்கங்களில் ஈடுபட கூடாது என அறிவுறுத்தப்பட்டு அதை பின்பற்றி வருவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபகாலமாக கவர்ச்சி விளம்பரங்களை நம்பி அதிக லாபம் ஈட்டலாம் என கிரிப்டோகரன்சி மற்றும் அதனை சார்ந்த பணமதிப்பு முதலீடுகளில் பொதுமக்கள் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து ஏமாந்து வருகின்றனர். குறிப்பாக சில காவலர்கள் பணியில் கவனமின்றி பணம் மற்றும் சேமிப்புகளை அதில் முதலீடு செய்து ஏமாந்ததுடன் தன் இன்னுயிரை மாய்த்து கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல் குடும்பங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

உதாரணமாக இரு ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களை சார்ந்த நபர்கள் டெலிகிராமில் வந்த விளம்பரங்களை பார்த்து bit fund mining investment company மற்றும் online bitcoin trading ஆகிய நிறுவனம் மூலமாக கிரிப்டோகரன்சியில் முறையே 20,67,136 மற்றும் 1.24 கோடி ரூபாயை தவணை முறையில் செலுத்தி தாங்கள் ஏமாறுவதை அறியாமல் சிறுக சிறுக செலுத்தி வந்துள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இது போன்ற கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாறுவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே காவலர்கள் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்து விட்டு வங்கி மற்றும் முதலீடுகளில் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார். காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் இந்த சுற்றறிக்கையை அனைவருக்கும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in