போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கிடம் 13 மணி நேரம் விசாரணை... அதிர வைக்கும் பின்னணி தகவல்கள்!

ஜாபர் சாதிக்கை காரில் அழைத்துச் செல்லும் என்சிபி அதிகாரிகள்.
ஜாபர் சாதிக்கை காரில் அழைத்துச் செல்லும் என்சிபி அதிகாரிகள்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அதிகாரிகளால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்
கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்

2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3,500 கிலோ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 9-ம் தேதி போதைப்பொருள் கடத்தல் மன்னனும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை விசாரிக்கன ஏழு நாட்கள் போலீஸ் காவல் வழங்கி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து ஏழு நாட்களாக ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது இந்த கடத்தல் சம்பவத்தில் அவரது சகோதரர்களான சலீம் மற்றும் மைதீன் ஆகியோருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அவரது சகோதரர்களான சலீம் மற்றும் மைதீன் ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

மேலும், ஜாபர் சாதிக் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே போதைப் பொருள் கடத்தியதாக கூறப்பட்டு வந்த நிலையில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி வெளிப்பட்டது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தியுள்ளது தெரிய வந்தது.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

இந்த கடத்தல் சம்பவத்தில் குடோன் அமைத்து போதைப் பொருட்கள் கடத்தி வந்த ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா (எ) சதானந்தத்தை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான சதானந்தம் பெயரில் இயங்கி வந்த குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஜாபர் சாதிக்கு சொந்தமான ஏழு செல்போன் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே ஜாபர் சாதிக்கிற்கு வழங்கப்பட்ட ஏழு நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை மீண்டும் போலீஸ் காவல் கேட்டு அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கூடுதலாக மூன்று நாட்கள் போலீஸ் காவல் வழங்கி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பிடிபட்ட போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் - ஜாபர் சாதிக்
பிடிபட்ட போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் - ஜாபர் சாதிக்

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 7 செல்போன்களில் உள்ள ஆவணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் மெயில் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு இவர் தொடர்பு கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மெயிலில் என்னென்ன தகவல்கள் அனுப்பி உள்ளார்? போதைப் பொருள் குறித்து யார் யாருடன் மெயில் மூலமாக பேசியுள்ளார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களைக் கண்டறிவதற்காக அவர் நேற்று காலை 5 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக அதிகாரிகள் சென்னை அழைத்து வந்தனர்.

பின் அங்கிருந்து சென்னை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சென்னை மண்டலம் - போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கை வைத்து சுமார் 13 மணி நேரத்திற்கு மேலாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவலின் பேரில் ஜாபர் சாதிக்கின் மேலாளர் இம்ரான் மற்றும் கணக்காளர் ஷெரிப் ஆகியோரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ராயபுரத்தில் இருந்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, இவர் போதைப் பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணத்தில் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்தும், பல ஆண்டுகளாக போதை பொருள் கடத்தி வருவதால் ஜாபர் சாதிக்கின் தொடர்புகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலமாக பெற்றனர்.

இதனையடுத்து இன்றுடன் ஜாபர் சாதிக்கின் போலீஸ் காவல் முடிவடைவதால் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு அவரை விமானம் மூலமாக டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் ஜாபர் சாதிக்கிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in