அமெரிக்க மியூசியத்தில் சோழர்காலச் சிலைகள் - சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடிப்பு

சோழர் காலச் சிலைகள்
சோழர் காலச் சிலைகள்

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு பழங்காலத்து சோழர் காலச் சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பழங்கால உலோகச் சிலைகள் திருடப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2017ம் ஆண்டு விக்ரபாண்டியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் சம்பந்தப்பட்ட கோயிலில் இருந்த விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, யோக நரசிம்மர், விநாயகர், நடன சம்பந்தர்,சோமாஸ்கந்தர், நின்ற திருக்கோலத்தில் உள்ள விஷ்ணு, நடனம் புரிந்த நிலையில் உள்ள கிருஷ்ணர் ஆகிய 9 சிலைகளும் திருடப்பட்டு போலியான சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டியூட் மூலமாக திருடப்பட்ட சிலைகளின் புகைப்படத்தைப் பெற்று, அதை ஒப்பிட்டு உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகம், ஏல மையங்களில் இணையதளம் வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர்.

நர்த்தன கிருஷ்ணர்
நர்த்தன கிருஷ்ணர்

அப்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் திருடப்பட்டுள்ள விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகள் இருப்பதையும், அமெரிக்கா மிசோரி மாகாணத்தில் கன்சாஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் யோக நரசிம்மர், விநாயகர் சிலைகள் இருப்பதையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.

அமெரிக்கா வாஷிங்டன் டிசியில் உள்ள பிரியர் சாக்லர் அருங்காட்சியத்தில் ஆத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தர் சிலையும், கிறிஸ்டிஸ்.காம் இணையத்தில் நடன சம்பந்தர் சிலைகள் இருப்பதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர். இதனை சிலை நிபுணர்களும் உறுதிப்படுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் ஆத்தூரில் இருந்து திருடப்பட்ட சோமஸ்கந்தர் மற்றும் நடன சம்பந்தர் சிலைகள் 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலச் சிலைகள் என்பதும், திருடப்பட்ட சிலைகளை கடந்த 2011ம் ஆண்டு 98,500 டாலருக்கு அமெரிக்காவில் உள்ள இந்த அருங்காட்சியத்திற்கு விற்கப்பட்டிருப்பதும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள இரு சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வர உரிய ஆவணங்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கெனவே அமெரிக்கா அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து சிலைகள், தற்போது அமெரிக்கா வாஷிங்டன் அருங்காட்சியகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிலைகள் என மொத்தம் 7 சிலைகளை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in