
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜா மகன் டால்வின் (37). இவர் கடந்த 2021ம் ஆண்டு, அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை காட்டியும், மிரட்டியும் குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து, கடந்த 03.02.2022 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் தீர்ப்பளித்தார். குற்றவாளியான டால்வினுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசின் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இழப்பீடு நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ரேவதி, எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் ரபீலா குமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!