
சென்னை சிந்தாரிப்பேட்டையில் நேற்று முந்தினம் இரவு பாஜக பிரமுகர் பாலச்சந்தரை 6 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. இது குறித்து சிந்தாரிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக பாலச்சந்தரை சித்தாரிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிரதீப், அவரது தம்பி சஞ்சய் ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும்பணி முடிக்கிவிடப்பட்டது.
இந்நிலையில் சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படையினர் எடப்பாடி விரைந்து பதுங்கியிருந்த பிரதீப், சஞ்சய், கலை, ஜோதி ஆகியோரை கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.