ஷங்கர் இயக்கி வரும் படத்தை. ரூ.350 கோடிக்கு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. இந்தப் படத்தில், இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். ஏராளமான பொருட்செலவில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு புணே அருகே பிரம்மாண்ட அரங்கம் அமைத்து நடைபெற்றது. அதில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக மட்டுமே ரூ.23 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்து வருகிறது. ஜூன் மாதத்துக்குள் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, 6 மாதம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்குத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் இந்தி மற்றும் அனைத்து மொழி திரையரங்க மற்றும் வெளிநாட்டு உரிமைகளை மட்டும், ஜீ நிறுவனம் ரூ.350 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் இந்த ஒப்பந்தம் சமீபத்தில் முடிந்துள்ளதாக மும்பை சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.