பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு சென்னை சத்யபாமா பல்கலைக்கழம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா 1997ம் ஆண்டு ‘ அரவிந்தன்’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2000 ம் ஆண்டு முதல் யுவனின் இசைதான் இளைஞர்களின் நீங்காத நாதமானது. துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், கற்றது தமிழ், மங்காத்தா, பில்லா, மாநாடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். பாடல்கள் மட்டுமின்றி இவரின் பின்னணி இசைக்கும் எண்ணற்ற ரசிகர்கள் உண்டு.
16 வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போதும் அவர் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக்கொண்டுள்ளார். திரைவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யுவனின் இசை பயணத்தை பாராட்டி சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த 31வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜா மற்றும் விஞ்ஞானி வி.பாலகுரு ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.