தீவிர உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சைக்கிளிங், யோகா, டயட் உணவு, அதிகாலை பயிற்சி என தன் உடற்பயிற்சி தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் தவறாமல் பகிர்ந்து வருகிறார்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும், ஒருவர் எந்த மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து இருக்கிறார். அந்த பேட்டியில், " யார் ஒருவர் 108 சூரிய நமஸ்காரங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களது உடலின் மேற்பகுதி வலுப்பெறும். அதுவே ஒருவர் வாரத்தில் மூன்று நாட்கள் ஸ்காவ்ட்ஸ் (squats) பயிற்சிகள் செய்து வந்தால் உடலின் கீழ்ப்பகுதி வலுப்பெறும்" என தெரிவித்துள்ளார்
தொடர்ந்து அவர் கூறுகையில் , "ஒவ்வொருவருக்கும் தங்களின் உடல் பற்றிய புரிதல் என்பது இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு க்ளூட்டோன் வகை உணவுகள் ஒத்து கொள்ளும். சிலருக்கு ஒத்து கொள்ளாது. அதனால், அது மோசம் என்று மொத்தமாக ஒதுக்கி விட முடியாது. சிலர் அரிசி வகை உணவுகள் தான் நம் உடல் எடையை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால், இந்தியர்களில் 90 சதவீதம் பேர் தங்களது சிறு வயதில் இருந்தே அரிசி உணவுகளைத் தான் சாப்பிட்டு வளர்ந்து இருக்கிறார்கள்.
அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலின் தேவை என்ன என்பதைப் பற்றி உணர்ந்திருக்க வேண்டும். என்ன தேவை, என்ன தேவையில்லை என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இதற்காக நீங்கள் ஆன்லைனிலோ அல்லது வேறு ஒருவர் சொல்வதையோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவர்கள் சொல்வதில் சிலவற்றைக் கேட்கலாம். ஆனால், உங்கள் உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை, டயட் சார்ட்டை நீங்கள் தான் உருவாக்க வேண்டும்" என கூறியிருக்கிறார்
மேலும், "யோகாவோ, ஜிம்மோ உங்கள் உடல் எதற்கு ஒத்துழைக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். இப்படி ஒரு வழக்கத்திற்குள் நீங்கள் செல்லும் போது உங்கள் உடல் எதற்கு ஒத்துப் போகிறது, எதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதையும் அதுவே உங்களுக்குச் சொல்லும். அதைக் காட்டிக் கொடுத்து உங்கள் உடல் உங்களிடம் பேசும்.
நீங்கள் ஜிம்மில் பயிற்சி செய்தால் கூட எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை உடல் உங்களுக்குத் தெரியப்படுத்தும். நீங்கள் எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என அந்த பேட்டியில் கூறியுள்ளார் ஐஸ்வர்யா.